ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைவாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவும், “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் “ஒற்றுமையாக ஒன்றிணைவோம் – தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளின் அடிப்படையிலும் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் தேசிய தூய்மை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வு புதிய காத்தான்குடி வடக்கு 167A கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மெளஜூத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இத்தூய்மை வேலைத்திட்டத்தின் போது கடற்கரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டதுடன், கால்வாய் ஓரங்களில் காணப்பட்ட கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், வீதி ஓரங்களில் அடர்ந்து காணப்பட்ட புற்கள் வெட்டி அகற்றப்பட்டு, சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் காத்தான்குடி “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் இணைப்பாளருமான எம்.பி.எம். பிர்தெளஸ் நழீமி, காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பினர், இலங்கை விமானப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், சுகாதாரப் பரிசோதகர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இத்தேசிய தூய்மை வேலைத்திட்டம் ஒரே நாளில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் பல்வேறு தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கால்வாய்கள், வீதி ஓரங்கள், பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பகுதிகளை சுத்தப்படுத்துதல், குப்பைக் கழிவுகளை அகற்றுதல், அடர்ந்து காணப்படும் புற்கள் மற்றும் புதர்களை அகற்றுதல் போன்ற பணிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதும், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களைப் பேணிப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அரச நிறுவனங்கள், பாதுகாப்புத் துறையினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் தூய்மையானதும் அழகானதுமான காத்தான்குடியை உருவாக்க முடியும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.























