காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவின் 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது 2024.01.18 ஆந் திகதி வியாழக்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா (பா.உ) அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தின் போது கடந்த அபிவிருத்தி கூட்டத்தின் போது முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரினால் விரிவாக ஆராயப்பட்டதுடன் தீர்மானங்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
மேலும் இக் கூட்டத்தில் எதிர்காலத் திட்டங்கள் சம்பந்தமான விடயங்கள் மற்றும் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் மீளாய்வுகளும் இடம்பெற்றதுடன் மிக முக்கியமாக காத்தான்குடி பிரதேசத்தில் நிலவுகின்ற வெள்ள அனர்த்தம் சம்பந்தமான விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.சில்மியா, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.தனுஜா, மற்றும் பிரதேச செயலகப்பிரிவின் திணைக்கள தலைவர்கள், மற்றும் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மீனவர் சங்க உறுப்பினர்கள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



















