கள உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது 2023.09.04. ஆந் திகதி திங்கட்கிழமை பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரி அவர்கள் கலந்து கொண்டதுடன் மக்களை சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து அவர்களை ஓய்வூதியக்காரர்களாக மாற்றி நன்மையடையச் செய்து 2023 ம் ஆண்டிலும் தேசிய அடைவு மட்டத்தை அடையவேண்டும் எனவும் அதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் செயற்படவேண்டும் எனவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அடுத்து சமூக நலன்புரி நன்மைகள் கொடுப்பனவிற்காக தெரிவு செய்யப்பட்ட 3354 பேரில் ஜூலை 31 ஆந் திகதிக்கு முன்னர் வங்கிக் கணக்குகளை திறந்த 2041 பேரில் 1354 பேருக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட்ட போதிலும் 684 நபர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஏனைய காரணங்களால் அவர்களது கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஜூலை 31 க்கு பின்னர் வங்கிக் கணக்குகளை திறந்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாத ஏனையவர்களுக்கு எதிர்வரும் வாரங்களில் வழங்கப் படும்.அத்துடன் 5345 மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதற்கான மேன்முறையீடுகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் அனைத்து உத்தியோகத்தர்களும் வழங்குவதன் மூலம் இலகுவாக தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சௌபாக்கியா, கிராம சக்தி வேலைத்திட்டம், சமுர்த்தி, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், காணி, சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர், மற்றும் பிரதேச தொகை மதிப்பு உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (Environment), சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய உத்தியோகத்தர்களிடம் தங்களது வேலை முன்னேற்றங்கள் தொடர்பாக பிரதேச செயலாளரினால் மீளாய்வு செய்யப்பட்டது.




















